Friday, March 04, 2005

பாவனை பேசலன்றி..

.


ஆசிரியர்: ஆசி. கந்தராஜா
வெளியீடு: மித்ர பதிப்பகம், 375/8 ஆர்காட் சாலை, சென்னை 600 024, தமிழகம், இந்தியா
மின்னஞ்சல்: www.mithra@md4.com.in
ஆசிரியரின் மின்னஞ்சல்: a.kantharajah@uws.edu.au

கலாநிதி ஆசி.கந்தராஜாவிற்குப் பல்வேறு வெற்றிகரமான முகங்களுண்டு. உயிரியல் விஞ்ஞானி; நாடகக் கலைஞர்; வானொலிக் கலைஞர்; எழுத்தாளர். இவரது பத்துச் சிறுகதைகள் (சில நெடுங் கதைகள்) பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் முன்னுரையுடன், ட்ரொஸ்கி மருதுவின் அழகான அட்டைப் படம் மற்றும் சித்திரங்களுடன் 'பாவனை பேசலன்றி..' என்னும் தலைப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.முன்னுரையில் பிரபஞ்சன் "சுந்தரராஜாவின் கதைகள் சுந்தரராஜாவின் கதைகளே. அதாவது அவருடைய அனுபவம் சார்ந்த கதைகள். அதனால் தான் அவருடைய கதைகள் நிஜமான அனுபவத்தை வாசகர்க்கு மாற்றித் தருகின்றன. கதைகளின் பலம் அவை சொல்லப்பட்ட விதத்தில் நடந்திருக்கும் என்று நம்பும் படியாக இருப்பதுதான்." என்று கூறுவது இத் தொகுதியைப் பொறுத்தவரையில் சரியான வார்த்தைகள். தொகுதியிலுள்ள கதைகளின் களம் பரந்து பட்டது. ஈழத்துத் தமிழ் மக்களின் சமகால பொருளாதார , அரசியற் பிரச்சினைகள், மலையகத் தமிழரின் பிரச்சினைகள், அகதிகளாகப் புலம் பெயர்ந்த தமிழர் எதிர்நோக்கும் அனுபவங்கள், புலம் பெயர்ந்த தமிழ் முதியவர்கள் பிரச்சினைகள், புதிய சூழலில் காணப்படும் பிரச்சினைகள்... இவ்விதம் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொகுதி முழுக்க பரவிக் கிடக்கின்றன.

தொகுதியின் முதற் கதையான 'காலமும் களமும்' ஊரில் 'அந்த' மாதிரி வாழ்ந்த விதானையார் மாமாவின் ஆஸ்திரேலிய அனுபவத்தை ஒருவித எள்ளலுடன் விபரிக்கிறது. நாற்சார் முற்றத்தில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க மாமி சூடு பறக்க எண்ணை தேய்த்து விடும் காட்சி விதானையாரைக் கண்முன்னல் கொண்டு வந்து நிறுத்துகிறது. பதவிகளை அடைவதற்காக எந்தவகை யுக்திகளையும் கடைப்பிடிக்கத் தயங்காத விதானையாரின் பருப்பு ஆஸ்திரேலியாவில் வேகவில்லை. அவரது முன்னால் காதலியான விசாலாட்சி உருவில் வந்து பழி வாங்கி விடுகிறது. தளர்ந்தாரா மாமா? ' அறைக்குள் எட்டிப் பார்த்தேன். உண்மைதான். அந்த மஞ்சள் நிற ஆஸ்திரேலிய தமிழர் விபரங்கள் அடங்கிய கையேட்டில் சிட்னி தமிழர் அமைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மாமா ஈடுபட்டிருந்தார். காலங்களும் களங்களும் மாறினாலும் தமிழனுடைய குணம் மாறாது என்று என் மனதில் தோன்றிய நினைவினை மறைத்துக் கொண்டு பனஞ்சாராயப் போத்தலைக் கவசமாகக் கைப்பற்றினேன்.' எனக் கதை முடிகிறது. 'என் எழுத்து ஊழியத்தின் ஆசான் எஸ்.பொ. அவர்களே என்கின்றார் ஆசி.கந்தராஜா தனது முன்னுரையில். இச்சிறுகதையில் ஆங்காங்கே காணப்படும் எழுத்து நடை எஸ்.பொ.வின் பாதிப்பினைக் காட்டும். உதாரணமாக "..விசாலாட்சி காட்டிய 'பவிசு'..","..விசாலாட்சி மாமிக்கு இப்பொழுதும் கட்டுக் குலையாத தேகம். கண்ணைச் சுழற்றி உடம்பைக் குலுக்கி 'பவிசு' காட்டுவதில் மகா கெட்டிக்காரி..." போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தொகுதியிலுள்ள 'யாவரும் கேளீர்' இத் தொகுதியின் முக்கியமான கதை. இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளியான முத்துச்சாமி எண்பத்து மூன்று கலவரத்தில் பாதிக்கப்பட்டுத் தாய் நாடான இந்தியா திரும்புகின்றான். அங்காவது அவனைற்கு நிம்மதி கிடைத்ததா? இம்முறை தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிப் பேயின் கோரநாக்குகள் அவனைப் பழிவாங்கி விடுகின்றன. கதையில் வரும் பாத்திரங்களிலொன்றான ஏற்காட்டுத் தோட்டத் தலைமைக் கங்காணியான சுந்தரத் தேவர் 'தமிழன் அது இதுன்னு பேசுறதெல்லாம் அரசியல். அதை நம்ம கட்சித் தலைவங்க பாத்துக்குவாங்க..அவங்க இன்னிக்கு 'இந்தியாக்காரன்' என்ற தேசியம் பேசுவாங்க.. நாலைக்கு தமிழன்னு சொல்லி புறநாநூறுக் கதை சொல்வாங்க..அதெல்லாம் எலெக்ஷனுக்கு எலெக்ஷன் தொகுதிக்குத் தொகுதி மாறும். அதெல்லாம் கட்சித் தலைவங்க சமாச்சாரம்.. ஆனா ஜாதி அபிமானம் தான் நமக்குப் பெரிது..தேவன் மறவன். அவனுக்காக நாங்க உசிரையும் குடுப்பம்..' என்று முழங்குவார். அந்த முழங்கல் தமிழகச் சூழலை அழகாகப் படம் பிடித்து விடுகிறது. 'கள்ளக் கணக்'கில் வரும் சீன அரச உத்தியோகன் லியொங் காவல் துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறான். ஆனால் ஆசிரியரோ அதன் மூலம் சோஷலிசத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயத் தொடங்கி விடுகின்றார்.

தொகுதியிலுள்ள 'அம்மா பையன்' இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது.

காளைகள் கடுவன் நாய்களிற்கு 'நலமடித்து' கால்களிற்கு 'லாடன்' அடித்துத் தொழில் செய்து வந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகனைக் 'கொட்டியா' என்று சந்தேகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் இவரைக் கைது செய்து சித்திரவதை செய்கிறது. கால்கள் அடித்து நொறுக்கப் பட்டு, நகங்களும் மயிர்களும் பிடுங்கப் பட்டு, சூடு வைத்த தீக்காயங்களுடன் நடக்க முடியாமல் , விதைகள் வீங்கிய நிலையில் விடுதலை செய்யப் படும் அவர் தான் முன்னர் வாயில்லா ஜீவன்களிற்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்க்கின்றார். ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் பல்வேறு வகையான சித்திரவதைகளைக் கதை கூறும். அதே நேரத்தில் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் குரலெடுப்பும். நாய்களிடமுள்ள 'இனமான' உணர்வுகள் கூட மனிதனிடமில்லாததை 'இனமானம்' அங்கதம் ததும்ப விபரிக்கும். 'மறுக்கப்படும் வயசுகள்' பிள்ளைகளை இயல்பாக வளரவிடாது தமது அபிலாஷைகளை அவர்கள் மேல் திணித்து, 'ரியூசன்' 'கலை விழா'வென்று ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சித்திரிக்கும்.

தொகுதியின் நீண்ட கதைகளிலொன்றான 'அடிவானம்' இரண்டு பிரச்சினைகளை கூறுகிறது. சோஷலிச கிழக்கு ஜேர்மனியில் ஒன்றாக வாழ்ந்த குடும்பமொன்று முதலாளித்துவ மேற்கு ஜேர்மனியுடன் இணைவின் பின் புதிய சூழலின் விளைவாக சிதைந்து விடுகிறது. அடுத்தது.. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் நிலை அலசி ஆராயப்படுகிறது. சமூக உதவிப் பணத்தில் வாழும் குடிகாரச் சின்னராசாவின் கொடுமையால் மனைவி தவமணியும் பிள்ளைகளும் வாடுவதைக் கதை விபரிக்கிறது. நிலைமையைப் பொறுக்காத தவமணி இத்தாலியனின் சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பெற்று நாடு திரும்பவும் ஏற்பாடுகள் செய்கிறாள். இறுதியில் 'குடிகாரன் எண்டாலும் புருஷன்..புருஷன்..' என்று தனது முடிவை மாற்றிக் கொள்கிறாள். இவர்களும் இலங்கையில் கலவரத்திற்கு முன்னர் நன்கு வாழ்ந்த குடும்பம் தான். புதிய சூழலின் விளைவாக குடும்ப உறவுகள் சிதைந்து விடுகின்றன. இளைய மகனே கத்தியைத் தூக்குமளவிற்குக் குடிகாரத் தந்தையின் கொடுமை. ஆனால் ஜேர்மனியக் குடுமபமோ நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறது. இலங்கைக் குடும்பமோ பிரச்சினைகளிற்குப் பின்னரும் சேர்ந்திருக்கிறது.இரண்டு விதமான கலாச்சாரங்கள் எவ்விதம் புதிய சூழலைத் தத்தமது பாணியில் எதிர்கொள்கின்றனவென்பதை அடிவானம் விபரிக்கிறது.

தொகுதியின் மற்றுமொரு நீண்ட கதையான 'பாவனை பேசலின்றி..' ஆஸ்திரேலியாவில் மரணித்த சின்னத்துரை வாத்தியாரின் இறுதிக் கிரியைகளின் பின்னணியில் அவர் அங்கு இருந்தவரை பட்ட துன்பங்களை எடுத்துரைக்கும். ஆஸ்திரேலிய மேற்குடி வாழ்க்கை வாழும் அவரது மகனும் மருமகளும் அவர் இருந்தபோதோ வயோதிபர் விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றார்கள். அவரால் ஒழுங்காகச் சுவையாகச் சாப்பிட முடியவில்லை. நண்பர்களுடன் இயல்பாக பழக முடியவில்லை. மகனதும் மருமகளினதும் மேற்குடி வாழ்க்கை முறை அவரைப் போட்டு அலைகழிக்கிறது. இறுதியில் சமூக உதவிப் பணமெடுத்தாவது தன்மானத்துடன் வாழ்வதற்காக அவரது உள்ளம் ஏங்குகிறது. பாவம் . அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை. அதே சமயம் இன்னுமொரு முதியவரான சம்பந்தியம்மா அடிக்கும் கூத்தும் விபரிக்கப் படுகிறது. முதியவர்களிலும் பலவிதம். பலவிதமான பிரச்சினைகள். இருக்கும் வரை அவரை இயல்பாக வாழ விடாதவர்கள் தமது கெளரவத்திற்காகத் தம்பட்டத்திற்காக, அவர் இறந்த பிறகு அவரது உடலிற்கு செய்யும் அலங்காரங்களென்ன? விடும் கண்ணீரென்ன? புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்கள் நிலையினையிட்டுக் குரலெலுப்பும் காலத்தின் கட்டாய பணிகளிலொன்றினை இக்கதை செய்கின்றது. அதே சமயம் கனடா போன்ற நாடுகளில் தற்கொலை செய்து கொண்ட முதியவர்கள் சிலரின் ஞாபகத்தினையும் இக்கதை தோற்றுவிக்கின்றது.

தொகுதியின் பெரும்பாலான கதைகள் மூன்றாம் மனிதரின் பார்வையில் கூறப்படுகின்றன. அந்த மூன்றாம் மனிதர் ஆசிரியரையே ஞாபகத்தில் கொண்டு வந்து விடுகிறது. பாத்திரங்கள் வாயிலாகவே கதைகளை நகர்த்தியிருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினைத் தந்ததற்காக ஆசிரியரையும், வெளியிட்டதற்காக 'மித்ர' பதிப்பகத்தினரையும் பாராட்டலாம்.

- திருமூலர்-

நன்றி:பதிவுகள்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 5:54 AM, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பாவனை பேசலன்றி.. புத்தகத்தின் விமர்சனம்/அறிமுகம் அளித்ததற்கு நன்றி

 

Post a Comment

<< Home