Sunday, November 27, 2005

அகவணக்கம்

தமிழீழ விடுதலை/தமிழர்களின் விடுதலை என்னும் பெருங்கனவிற்காய் தமது இன்னுயிரை ஈந்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மரணித்த பொதுமக்களையும் இந்நாளில் நினைவு கூருகிறேன்.

அவர்களுக்கு எனது அகவணக்கம்

நாம் இழந்து போன இந்த ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை.

ஓருயிரை தியாகி என்றும் இன்னோருயிரை துரோகி என்றும் கட்டமைக்கும் ஒருபக்கத்தினரைப் போலவே

ஓருயிரை மக்கள் நேசர்கள் என்றும் இன்னோருயிரை பயங்கரவாதிகள்/தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கட்டமைக்கும்

இன்னோரு பக்கத்தினரையும் மறுக்கிறேன்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, November 22, 2005

சிங்கப்பூரின் முன்னுதாரணம்

உலகமெங்கும் சிறுவர்களை பாலியற் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.தென்கிழக்காசிய வட்டாரம் இதில் முன்னணியில் இருக்கிறது.

சிங்கப்பூரில் சட்டபூர்வ வயதுக்கு குறைந்தோரை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதோ அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.வயது குறைந்த ஒருவரின் விருப்பதுடன் உறவு கொண்டால் கூட அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதனால் வயதுகுறைந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் ஆண்கள் தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவின் பாத்தாம் நகருக்கும் விடுமுறையைக் கழிக்கப் போவது வழமையாக உள்ளது.

கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் ஆண்கள் வயது குறைந்தோருடனான உறவை மேற்கொள்ள 'பாத்தாம்' செல்வது அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.பன்னிரெண்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான பெண்களை முதலீடாகக் கொண்டு பாலியற் தொழில் 'பாத்தாமி'ல் கொடிகட்டிப் பறக்கிறது.
இதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.இனிமேல் சிங்கப்பூருக்கு வெளியேயும் சிங்கப்பூர் வாசிகள் வயது குறைந்தோருடன் பாலியல் உறவிலீடுபட்டது நிரூபிக்கப்பட்டால் உள்ளூரில் நடைபெறும் குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை கிடைக்கும்.

இதன்படி 'பாத்தாம்' செல்லும் ஒரு சிங்கப்பூர் வாசி.வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக்கொண்டால் கூட தண்டனைக்குரிய குற்றம்.இதே சட்டத்தின் படி உள்ளூரில் பாலியல் வன்முறைக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை அதனை வெளியூரில் செய்தாலும் கிடைக்கும்

உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்கிறது அரசு
ஒருவர் பாலியல் உறவுகொள்வதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுந்தாலும் சிங்கப்பூர் சரியானதொரு முன்னுதாரணத்தை காட்டியுள்ளது.இதனை வாய்கிழிய ஜனநாயகம் பேசும் மற்றைய நாடுகளும் பின்பற்றினால் சிறுவர்களை பாலியலில் ஈடுபடுத்துவது எவ்வளவோ குறையும்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Monday, November 21, 2005

காட்டுமிராண்டிகள் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இளைஞனை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இது பற்றி நிறைய எழுதினேன் கடைசியில் எனக்கே கோபத்தில் உளறுவதாகப் பட்டதால் அழித்துவிட்டேன்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு எதற்குப் போராட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஒருத்தனை அடித்தே கொல்ல முடியும் அதுவும் பொதுமக்கள் சேர்ந்து என்றால் யாழ்ப்பாணம் எந்தளவு வளர்ச்சி அடைகிறது என்று சொல்லத் தேவையில்லை.

இந்த மிலேச்சக் கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

இவன் ஒரு சமூக விரோதி இவனுக்கான தண்டனையை நீங்களே தீர்மானியுங்கள் என்று எழுதிய ஒரு வாசகம் போதும் இந்த நீதி தேவதைகளை உசுப்பேற்றி விடுவதற்கு.ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் சமூக விரோதி இளைத்தவன் ஒருவன் கிடைத்தால் நீதி தேவதையாகிவிடுகிறான்.

நாளைக்கே இராணுவம் புலி இயக்க உறுப்பினன் ஒருவனைப் பிடித்து கையையும் வாயையும் கட்டி சமூக விரோதி என்று எழுதிப் போட்டால் போதும்.அவனை யார் இன்னார் என்று விசாரிக்காமல் அடித்தே கொன்றுவிட்டு நாட்டைக் காப்பாற்றிய சந்தோசத்தில் போகும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம்.

இந்தச் செயற்பாட்டில் தாங்கள் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றி புலிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.இல்லாவிட்டால் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி

யாழ்ப்பாணத்து மக்கள் மெல்ல மெல்ல தீவிர மனச்சிதைவுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் பயமாகவிருக்கிறது

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Thursday, November 17, 2005

பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்












ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.


(மேலதிக செய்தி உதவி:ஜனநாயகம் அண்ணா)

இந்நிகழ்வைப் படம்பிடிக்க முயன்ற பெல்ஜியம் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரான புலம்பெயர் வாழ் ஜனநாயகப் பேரவையினரால் தாக்கப்பட்டு அவரது படப்பிடிப்புக் கருவி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதே வழியில் தொடர்ந்தும் புலம் பெயர் வால் ஜன நாய் அகத்தை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்

கீழே வைக்கப்பட்டிருக்கும் போத்தல்களில் பச்சை :ஹெனிக்கன்(ஏதோ இந்தப் பொடிப்பயலுக்குத் தெரிந்தது) மற்றது என்ன பிராண்ட் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த சமூகப் பொறுப்புணர் வாலர் பட்டம் கிடைக்கும்.


பட உதவி நன்றி அநாமதேயம்:ஜனநாயகம் வலைப்பதிவு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Wednesday, November 16, 2005

ராம்- சாயம் வெளுத்தபின்னும் வண்ணப்பூச்சு

இந்து ராமின் பிய்ந்து போன முகமூடியை ஒட்டவைக்கும் முயற்சி நடக்கிறது.அவர் கண்மூடித்தனமான இந்தியத் தேசியவாதி இல்லை என்பதற்கு ஜெயகாந்தனின் கட்டுரை நோண்டியெடுக்கப்பட்டு அது பொருந்துமா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் ஜெயகாந்தன் சொல்கிறார் இதைச் சொன்ன ஜெயகாந்தன் புத்தியுடையவராகவே இருந்திருப்பார் என்ற பொதுப்புத்தியில் இதனை நானும் வழிமொழிகிறேன் என்கிற ரீதியில் சிவகுமார் குறிப்பெழுதுகிறார்.

அதாவது அன்றைய ராம் புலிகளை ஆதரித்ததற்கும் இன்றைய ராம் புலிகளை எதிர்ப்பதற்கும் கட்டாயம் காரணம் இருக்கும் அந்தக் காரணமோ அவரது கொள்கையோ எதுவாக இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன் அவரை வழிமொழிகிறேன்.இரண்டு ராமையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொதுப்புத்தியில்லை மந்தையாட்டுப்புத்தி.

மந்தையாட்டுக்கூட்டத்தில் முன்னால் போகும் ஆட்டைப் பின் தொடர்வதற்கு பின்னால் போகும் ஆட்டுக்குக் கட்டாயம் காரணம் இருந்தே தீரும்.அதைத் தொடரும் ஆட்டுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.மொத்தத்தில் பார்க்கும் எமக்கு மந்தையாட்டுக் கூட்டம் ஒரே ஆட்டைப் பின் தொடர்வதாய்த் தோன்றுவதற்குக் கூட ஏதேனும் காரணம் இருக்கலாம்.

இந்து ராம் மட்டுமல்ல இன்னபிற இந்தியத் தேசியவாதிகள் விடுதலைப் புலிகளையும் மற்ற இயக்கங்களையும் ஆயுதம் கொடுத்து,பயிற்சியும் கொடுத்து போராடத் தூண்டியதற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர் மேலிருந்த அக்கறை என்பதை விட இந்தியாவின் நலனில் உள்ள அக்கறை என்பதே பொருத்தமாக இருக்கும்.இந்து ராம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்கும் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததற்கும் அதேதான் காரணம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ராம் காட்டிய அக்கறை இந்திய நலனைச் சார்ந்ததன்றி ஈழத்தில் அமைதி ஏற்படவேண்டுமென்பதோ விடுதலைப்புலிகளுக்கு நன்மை செய்யவேண்டுமென்பதோ அல்ல.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்ட பின்னர் கூட அவர்களை தம் பக்கம் சாய்த்துவிட இந்திய அரசியல் மட்டத்தினரின் தூதராக பிரபாகரனைச் சந்தித்தார்அது கூட இந்திய நலனை முன்னிறுத்தியதுதான்.ஜெயகாந்தனுக்கு அந்த நேரத்தில் ராமை எதிர்க்கவேண்டி இருந்திருக்கிறது இந்தச் சம்பவத்தை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.ஆனால் அதனை உதாரணமாக சிவகுமார் எடுத்துப் போட்டிருப்பது ராமை நியாயப்படுத்தப் போய் தன் பங்கிற்கு அவரது முகமூடியை இன்னும் கொஞ்சம் பிய்த்துப் போட்டதாகத் தான் இருக்கிறது.

கடைசிவரை ஆரம்பத்தில் ராம் ஏன் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்கும் இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பதற்கும் காரணங்கள் தேட சிவகுமார் முனையவில்லை ராம் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.காரணமில்லாமல் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்றவாறாகத்தான் அவரது அணுகுமுறை இருக்கிறது.

எல்லா நேரத்திலும் இந்தியத் தேசியவாதியாகவே ராம் செயற்பட்டிருக்கிறார்.அதனாலேயே புலிகள் இந்தியாவின் அழுத்ததிற்கு பணியாத நிலமை வந்தபோது அவர்களின் தீவிர எதிர்ப்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.இதனை சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும் குள்ளநரித்தனம் என்றும் குறிப்பிடலாம் அல்லது சிவகுமார் சொல்ல வருவது மாதிரி இராசதந்திரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

வரலாறு என்பது ஒற்றைப் பரிமாணமுள்ளது அல்ல அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு அவற்றின் பரிமாணத்துக்கேற்ற மாதிரி அவற்றைப் பார்க்கவேண்டும் எம் கண்ணுக்கு வண்ணக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் வரலாறும் எமது கண்ணாடியின் நிறமாகத்தான் தோன்றும்.எதையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வதற்கு முன்னாலே வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

இந்த விடயத்தில் ஜெயகாந்தன் எவ்வளவோ மேல் என்று புரிகிறது.அவர் சொல்வது போன்று அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஒரே நிலைப்பாட்டில்-அது புலி எதிர்ப்பாக இருந்தாற் கூட-இருந்திருந்தால் அவரை மதிக்கலாம்.

ஆனால்

இந்த வன்முறையாளர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது வேறு: இவர்களுக்கே இடம்
கொடுப்பது வேறு என்று புரிந்து கொண்ட ராஜீவ் காந்திதான் ஜனநாயக வழியில் அரசியல்
தீர்வு காண்பது ஒன்றே ஈழப்பிரச்னை தீர வழியென்று நிரூபித்தார். அமிர்தலிங்கமும்,
ஈழப் புரட்சிகர முன்னணியினர் பலரும் ராஜீவின் வழியை ஆதரித்தனர். யாழ்ப்பாணம்
புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஈழத் தமிழ் மாநிலம் அமைந்தது. தேர்தலும் நடந்து
தமிழர்க்கு என்று ஒரு மாநில அரசும் அமைந்தது...


என்று சொல்வதற்கு ஜெயகாந்தன் நிச்சயம் வெட்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.பிரம்படி முதல் யாழ் வைத்தியசாலை வரை பலநூற்றுக்கணக்கான மக்களின் குருதியில் தோய்ந்து பொம்மை ஆளுநர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈழத்தமிழ் மாநிலம்.பலநூற்றுக்கணககான பெண்களை பசியாறக் கொடுத்து இந்திய இராணுவத்தால் ஜனநாயக முறைப்படி காவல் காக்கப்பட்டதை வசதியாக மறைக்கும் ஜெயகாந்தன் ராமுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர் இல்லை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்