Monday, March 14, 2005

பதுங்குகுழி நாட்கள்

.

ஆசிரியர்:பா.அகிலன்
வகை:கவிதைகள்
விலை:ரூ.45.00
வெளியீடு:குருத்து/காலச்சுவடு

மதிப்புரை : ஆர் முத்துக்குமார்

பா. அகிலன் ஈழத்தை சேர்ந்த கவிஞர். 1990 களில் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைத்த இவர் சேரன், வ.ஜ.ச. ஜெயபாலன் போன்ற படைப்பாளிகளின் கவிதைகளிலிருந்து தனக்கானஉந்து சக்தியை பெற்றதாக அவரே கூறுகிறார். ஈழத்துக்கவிதைகளில் 80க்கு முந்தைய படைப்புகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளை பேசப்பட்டுவந்தன. கா. டோனியலின் 'பஞ்சமர்' நாவல் உள்ளூர் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வட்டார மொழிச்சிலேடைகளுடன் பதிவு செய்திருந்தது. கலவரங்களுக்கும், சிங்கள பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்துக் விடப்பட்ட காலங்களுக்கும் பிறகு வந்த கவிதைகள் பெரும்பாலும் இழந்தவைகளின் நினைவாகவும், பதுங்குகுழியில் கழித்த பெரும்பீதி அழலங்களைப்பற்றியும், இழந்த உடைமை, இழந்த பண்பாட்டுச் சின்னங்கள், இழந்த இறந்த உறவுகள் பற்றியதுமான கவிதைகளாக மாற்றம் அடைந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாக தங்கள் அறிவியக்கத்தை, படைப்பியக்த்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர். ஒரு சாரார் சிங்கள எதிர்ப்பு மற்றும் அமைதி வேண்டி தங்களின் நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். இன்னொரு சாரார் தமிழ் ஈழப் போராளிகளின் செயல்பாடுகளையும், சாதிய மேட்டிமைகளையும் கண்டித்தே தங்கள் படைப்பு மற்றும் அறிவியக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்தப் பெரும் பிரிவில் சேரன், பா. அகிலன் போன்றவர்கள் முந்தையதையும், ஷோபா சக்தி, கலாமோகன், கற்சுறா போன்ற `எக்சில்' குழுவைச் சேர்ந்தவர்கள் பிந்தையதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒளி அச்சுக்கோர்வை, அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்திய பிறகு கவிதைக்குக் கீழே ஆனி, ஆவணி என்று 'தமிழ்' மாதங்களின் பெயர் இடப்படும் கருத்தாக்கம் என்னவென்று நமக்கு புரியவில்லை.

பொதுவாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி பின் மீண்டும் நினைவகத்துள் அதை மறு நினைவு படுத்துதல் என்பது அந்தந்த தருண நிகழ்வுகளின் மறுகற்பனை செய்யப்பட்ட பதிவுகளாகத்தான் இருக்கும். இந்த துரதிஷ்டம் அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும், உண்மையாக ஒருவன் அதை அனுபவிக்கும் தருணத்திற்கும், காத தூரம் அல்லது பேரியடைவெளி உண்டு. உண்மையில் இந்த `இடைவெளி' தான் படைப்பின் உந்து சக்தி. இதைத்தியானம் செய்யும் கவிஞன் ஒரு `எதிர்-ரொமான்டிக்' தளத்திலேயே செயல்படுவான். ஆனால் பா. அகிலனின் கவிதைகள் ரொமாண்டிக் தன்மைகளுடனேயே தேங்கிவிடுகிறது.

பதுங்கு குழி பற்றிய பயங்கர அனுபவங்களினூடே கூட சிறு ரொமாண்டிசிசம் தலைதூக்குகிறது. உதாரணமாக "பதுங்கு குழி நாட்கள் - III" என்ற கவிதையில் `நிர்மலவானம்' என்ற வரியும் - "பதுங்கு .IV" என்ற கவிதையில் "குருதியோலம்" கேட்கும் போதே "குருவிச் செட்டைகளும், பூவின் மென் இதழ்களும் வீழ்ந்தனவாம்" என்ற வரியும், மனித ஓலத்தைத் தாண்டிய ரொமாண்டிக் போலித்தனங்கள் நிறைந்த கற்பனையாகவே இருக்கிறது. உண்மையில் பதுங்கு குழி அனுபவங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அனுபவத்தின் எல்லையற்றதன்மை' என்றெல்லாம் பேசத் தெரிந்த பா. அகிலன் வார்த்தையிலேயே எல்லா உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கை கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

அனுபவம் அது பயங்கர அனுபவமோ அல்லது சாதாரண அனுபவமோ அதன் நடப்பின் இயல்பிலேயே படைப்புத்தளமும் அமைய வேண்டும். ஆனால் பா. அகிலன் `சொற்களின் யாத்திரை' அல்ல வார்த்தைகளின் பூஜிய எல்லைகளுக்குள் சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. பக்கம் 20ல் உள்ள `கிராமங்களின் மீதொரு பாடல்' என்ற கவிதையில் முதல்பகுதியில் `எனக்குத் தெரியாது' என ஆரம்பித்து ரொமாண்டிக் உணர்வகளும், பகுதி இரண்டில் அறிந்த கிராமங்கள் என்று நினைவு ஏக்கங்களும் வருகிறது. அதுவரை கவிதை பரவாயில்லை என்று தோன்றும்போதே பகுதி-மூன்று `ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் ஒரு நாள் சூரியன் எழுந்து புலர்ந்ததாம்.' என வரும் அதீத நம்பிக்கை வாழ்க்கைக்கு தேவை. ஆனால் கவிதைக்குத் தேவையில்லை அதனாலேயே அது சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.

எல்லோருமே அவரவர்களின் ஆதி-புரதானங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே, பயங்கர அனுபவங்கள் நினைவுபடுத்தும் புராதனம் உன்னதப்புராதனம், அதுவல்லாமல் சாதாரண அந்நியமாதல் அனுபவங்கள் கிளப்பும் புராதன நினைவு அவ்வளவு உன்னதமல்ல என்றெல்லாம் கூறமுடியாது. அவரவர்களுக்கான பயங்கரங்களும், அவரவர்க்கான ரொமாண்டிசிசமும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதுஎவ்வாறு வெளிப்பாட்டு தளத்தில் கலையாகவோ இலக்கியமாகவோ பரிணமிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பீடு சார்ந்த நிலைப்பாடுகளும் ஏற்படும்.

கிராபிக்ஸ் - ஜிம்மிக்ஸ் செய்வதில் செலுத்திய நாட்டத்தை பா. அகிலன் கூடுதலாக கவிதைகளில் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நமக்கு ஏற்படும் உணர்வு நியாயானதே.

வெங்கட் சாமிநாதனின் சிறிய முன்னுரை மிகவும் வழக்கமான பழகிப் போன ஒன்றுதான் அதை யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். பா. அகிலனின் 'பின்னுரை' வாசிக்க நன்றாக இருக்கும் நடையாகும். அதே இயல்பிலேயே கவிதைகளும் எழுதலாம். அனுபவங்களைப் பற்றி சிந்திக்கும்போது விஷயத்தில்தான் அதன் ஆழம் இருக்க வேண்டுமே தவிர யோசித்து யோசித்து வார்த்தைகளைப் போடுவதில் என்னாளும் கவிதானுபவம் நமக்குக் கிடைக்காது.
நன்றி:வெப் உலகம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Friday, March 11, 2005

பாலஸ்தீனக் கவிதைகள்



நூல் :பலஸ்தீனக் கவிதைகள்
மொழிபெயர்ப்பு :எம்.ஏ.நு·மான்
வெளியீடு :மூன்றாவது மனிதன்,37/14 வாக்ஷால் லேன், கொழும்பு-2
ஸ்ரீலங்கா.தொலைபேசி: 302759
மின்னஞ்சல்: adaiyalam@yahoo.com
விலை :ரூ.200-
பக்கங்கள் :162

எப்போதும் எந்தவொரு சமூகத்தின் கலாச்சார மரபிலும் கவிதை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. குறிப்பாக அரேபியக் கலாச்சார மரபில் கவிதைக்குத் தனியான இடமுண்டு. நீண்ட கவிதைப் பாரம்பரியத்துடன் செழுமை மிக்க கவிதா வெளிப்பாட்டு முறைகளைத் தன்னகத்தே கொண்டு வருகிறது. அரேபியச் சமூகத்தில் சமூக அரசியல் கருத்தியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இணையாகக் கவிதைகளிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. இந்த அரசியல் கவிதைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன.

21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து காத்திரமான செழுமைப்பாங்குடன் கூடிய கவிதைகள் அரேபியர்களிடையே தோன்றத் தொடங்கின. இவை அரேபியத் தேசிய உணர்ச்சிக் குமுறல்களுடனும், எழுச்சியுடனும் புது உத்வேகத்துடனும் கவிதையில் வெளிப்பட்டன.

இந்த நீண்ட நெடிய கவிதைப் பாரம்பரியம் பாலஸ்தீன மக்களின் துன்ப துயரங்களுடன் போராட்ட எழுச்சிகளுடன் சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக மாறியது. அரசு அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு, அடக்குமுறைகளுக்குக் கவிஞர்கள் பலியாக்கப்பட்டனர்; நாடு கடத்தப்பட்டனர். 1948-க்குப் பின்னர் பாலஸ்தீன மக்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்தனர்.

அரபு உலகின் எல்லா இடங்களிலும் சிதறடிக்கப்பட்டு வாழும் அரேபியர்களை ஐக்கியப்படுத்தவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டைத் திரும்பப் பெறவும் வேண்டி கோரிக்கைகளைப் படைக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனக் கவிதைகள் திரும்பவும் மீட்கப்பட்டுப் புதிய உத்வேகத்துடன் எழுதப்படத் தொடங்கின.

தொடர்ந்த பாலஸ்தீன மக்களின் போராட்ட எழுச்சியுடன் கவிதைகளும் வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன. தங்கள் தனித்துவ அரசியல் அடையாளம், தங்களின் சொந்த மண் பற்றிய ஏக்கம், விடுதலைக் கீதம் எனப் பாலஸ்தீனக் கவிஞர்களின் போராட்டம் அரசியல் கவிதை வழியே பிரதானப்படுத்தப்படுகிறது.

தமிழில் பாலஸ்தீனக் கவிதைகள் ஆங்காங்கு பலராலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஈழத்தில் 1981-களில்
9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம் பெற்ற 'பலஸ்தீனக் கவிதைகள்' எனும் தொகுப்பை கவிஞர் எம்.ஏ. நு·மான்மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். இத் தொகுப்பு அக் கால ஈழத்தின் அரசியல் முனைப்புக்குத் தக்க ஊக்கியாகவும் இருந்தது. தற்போது அந் நூல் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம் பெற்று −ரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழில் அரபுக் கவிதைகள் பல மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. யமுனா ராஜேந்திரன், சிவசேகரம் உட்பட பலரும் முயன்றுள்ளனர். அவர்களது தொகுப்புகளில் வெளிவந்த கவிதைகள் கூட இத் தொகுப்பில் உள்ளன. ஒரு கவிதையைப் பத்துப் பேர் மொழிபெயர்த்தால் பத்து வேறுபட்ட கவிதைப் பிரதிகள் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பதை நு·மானின் மொழிபெயர்ப்பும் நமக்கு உணர்த்துகிறது.

நு·மானின் கவிதை ஆளுமையும், மொழி ஆளுமையும், கவிதைச் செயற்பாடும் கவிதா வெளிப்பாட்டு உந்துதலும் தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தர முடிந்துள்ளது எனக் கூறலாம்.

தமிழில் அரசியல் போராட்டக் கவிதைகள் மேன்மேலும் ஊக்கம் பெற்று வளமான கவிதைகள் வெளிப்பட, நு·மானின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள பாலஸ்தீனக் கவிதைகளும் சிறந்த ஊக்கியாக இருக்கும். நீதி மறுக்கப்பட்டு அநீதிகள் எங்கும் தலை விரித்தாடும் பொழுது வெடித்துக் கிளம்பும் போராட்டங்களில் வடிகாலாகக் கவிதைகள் எப்படிப் பிறக்கும் என்பதற்குப் பாலஸ்தீனக் கவிதைகள் தக்க சாட்சியாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின், நீதி மறுக்கப்பட்ட மக்களின் குரலாகவே பாலஸ்தீனக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இவை பாலஸ்தீனர்களின் குரல்கள் மட்டுமல்ல. மானுட நீதி கேட்டுப் போராடும் அனைத்து மக்களின் குரல்களும் கூட. (ஆறாந்திணை)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Friday, March 04, 2005

பாவனை பேசலன்றி..

.


ஆசிரியர்: ஆசி. கந்தராஜா
வெளியீடு: மித்ர பதிப்பகம், 375/8 ஆர்காட் சாலை, சென்னை 600 024, தமிழகம், இந்தியா
மின்னஞ்சல்: www.mithra@md4.com.in
ஆசிரியரின் மின்னஞ்சல்: a.kantharajah@uws.edu.au

கலாநிதி ஆசி.கந்தராஜாவிற்குப் பல்வேறு வெற்றிகரமான முகங்களுண்டு. உயிரியல் விஞ்ஞானி; நாடகக் கலைஞர்; வானொலிக் கலைஞர்; எழுத்தாளர். இவரது பத்துச் சிறுகதைகள் (சில நெடுங் கதைகள்) பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் முன்னுரையுடன், ட்ரொஸ்கி மருதுவின் அழகான அட்டைப் படம் மற்றும் சித்திரங்களுடன் 'பாவனை பேசலன்றி..' என்னும் தலைப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.முன்னுரையில் பிரபஞ்சன் "சுந்தரராஜாவின் கதைகள் சுந்தரராஜாவின் கதைகளே. அதாவது அவருடைய அனுபவம் சார்ந்த கதைகள். அதனால் தான் அவருடைய கதைகள் நிஜமான அனுபவத்தை வாசகர்க்கு மாற்றித் தருகின்றன. கதைகளின் பலம் அவை சொல்லப்பட்ட விதத்தில் நடந்திருக்கும் என்று நம்பும் படியாக இருப்பதுதான்." என்று கூறுவது இத் தொகுதியைப் பொறுத்தவரையில் சரியான வார்த்தைகள். தொகுதியிலுள்ள கதைகளின் களம் பரந்து பட்டது. ஈழத்துத் தமிழ் மக்களின் சமகால பொருளாதார , அரசியற் பிரச்சினைகள், மலையகத் தமிழரின் பிரச்சினைகள், அகதிகளாகப் புலம் பெயர்ந்த தமிழர் எதிர்நோக்கும் அனுபவங்கள், புலம் பெயர்ந்த தமிழ் முதியவர்கள் பிரச்சினைகள், புதிய சூழலில் காணப்படும் பிரச்சினைகள்... இவ்விதம் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொகுதி முழுக்க பரவிக் கிடக்கின்றன.

தொகுதியின் முதற் கதையான 'காலமும் களமும்' ஊரில் 'அந்த' மாதிரி வாழ்ந்த விதானையார் மாமாவின் ஆஸ்திரேலிய அனுபவத்தை ஒருவித எள்ளலுடன் விபரிக்கிறது. நாற்சார் முற்றத்தில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க மாமி சூடு பறக்க எண்ணை தேய்த்து விடும் காட்சி விதானையாரைக் கண்முன்னல் கொண்டு வந்து நிறுத்துகிறது. பதவிகளை அடைவதற்காக எந்தவகை யுக்திகளையும் கடைப்பிடிக்கத் தயங்காத விதானையாரின் பருப்பு ஆஸ்திரேலியாவில் வேகவில்லை. அவரது முன்னால் காதலியான விசாலாட்சி உருவில் வந்து பழி வாங்கி விடுகிறது. தளர்ந்தாரா மாமா? ' அறைக்குள் எட்டிப் பார்த்தேன். உண்மைதான். அந்த மஞ்சள் நிற ஆஸ்திரேலிய தமிழர் விபரங்கள் அடங்கிய கையேட்டில் சிட்னி தமிழர் அமைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மாமா ஈடுபட்டிருந்தார். காலங்களும் களங்களும் மாறினாலும் தமிழனுடைய குணம் மாறாது என்று என் மனதில் தோன்றிய நினைவினை மறைத்துக் கொண்டு பனஞ்சாராயப் போத்தலைக் கவசமாகக் கைப்பற்றினேன்.' எனக் கதை முடிகிறது. 'என் எழுத்து ஊழியத்தின் ஆசான் எஸ்.பொ. அவர்களே என்கின்றார் ஆசி.கந்தராஜா தனது முன்னுரையில். இச்சிறுகதையில் ஆங்காங்கே காணப்படும் எழுத்து நடை எஸ்.பொ.வின் பாதிப்பினைக் காட்டும். உதாரணமாக "..விசாலாட்சி காட்டிய 'பவிசு'..","..விசாலாட்சி மாமிக்கு இப்பொழுதும் கட்டுக் குலையாத தேகம். கண்ணைச் சுழற்றி உடம்பைக் குலுக்கி 'பவிசு' காட்டுவதில் மகா கெட்டிக்காரி..." போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தொகுதியிலுள்ள 'யாவரும் கேளீர்' இத் தொகுதியின் முக்கியமான கதை. இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளியான முத்துச்சாமி எண்பத்து மூன்று கலவரத்தில் பாதிக்கப்பட்டுத் தாய் நாடான இந்தியா திரும்புகின்றான். அங்காவது அவனைற்கு நிம்மதி கிடைத்ததா? இம்முறை தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிப் பேயின் கோரநாக்குகள் அவனைப் பழிவாங்கி விடுகின்றன. கதையில் வரும் பாத்திரங்களிலொன்றான ஏற்காட்டுத் தோட்டத் தலைமைக் கங்காணியான சுந்தரத் தேவர் 'தமிழன் அது இதுன்னு பேசுறதெல்லாம் அரசியல். அதை நம்ம கட்சித் தலைவங்க பாத்துக்குவாங்க..அவங்க இன்னிக்கு 'இந்தியாக்காரன்' என்ற தேசியம் பேசுவாங்க.. நாலைக்கு தமிழன்னு சொல்லி புறநாநூறுக் கதை சொல்வாங்க..அதெல்லாம் எலெக்ஷனுக்கு எலெக்ஷன் தொகுதிக்குத் தொகுதி மாறும். அதெல்லாம் கட்சித் தலைவங்க சமாச்சாரம்.. ஆனா ஜாதி அபிமானம் தான் நமக்குப் பெரிது..தேவன் மறவன். அவனுக்காக நாங்க உசிரையும் குடுப்பம்..' என்று முழங்குவார். அந்த முழங்கல் தமிழகச் சூழலை அழகாகப் படம் பிடித்து விடுகிறது. 'கள்ளக் கணக்'கில் வரும் சீன அரச உத்தியோகன் லியொங் காவல் துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறான். ஆனால் ஆசிரியரோ அதன் மூலம் சோஷலிசத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயத் தொடங்கி விடுகின்றார்.

தொகுதியிலுள்ள 'அம்மா பையன்' இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது.

காளைகள் கடுவன் நாய்களிற்கு 'நலமடித்து' கால்களிற்கு 'லாடன்' அடித்துத் தொழில் செய்து வந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகனைக் 'கொட்டியா' என்று சந்தேகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் இவரைக் கைது செய்து சித்திரவதை செய்கிறது. கால்கள் அடித்து நொறுக்கப் பட்டு, நகங்களும் மயிர்களும் பிடுங்கப் பட்டு, சூடு வைத்த தீக்காயங்களுடன் நடக்க முடியாமல் , விதைகள் வீங்கிய நிலையில் விடுதலை செய்யப் படும் அவர் தான் முன்னர் வாயில்லா ஜீவன்களிற்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்க்கின்றார். ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் பல்வேறு வகையான சித்திரவதைகளைக் கதை கூறும். அதே நேரத்தில் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் குரலெடுப்பும். நாய்களிடமுள்ள 'இனமான' உணர்வுகள் கூட மனிதனிடமில்லாததை 'இனமானம்' அங்கதம் ததும்ப விபரிக்கும். 'மறுக்கப்படும் வயசுகள்' பிள்ளைகளை இயல்பாக வளரவிடாது தமது அபிலாஷைகளை அவர்கள் மேல் திணித்து, 'ரியூசன்' 'கலை விழா'வென்று ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சித்திரிக்கும்.

தொகுதியின் நீண்ட கதைகளிலொன்றான 'அடிவானம்' இரண்டு பிரச்சினைகளை கூறுகிறது. சோஷலிச கிழக்கு ஜேர்மனியில் ஒன்றாக வாழ்ந்த குடும்பமொன்று முதலாளித்துவ மேற்கு ஜேர்மனியுடன் இணைவின் பின் புதிய சூழலின் விளைவாக சிதைந்து விடுகிறது. அடுத்தது.. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் நிலை அலசி ஆராயப்படுகிறது. சமூக உதவிப் பணத்தில் வாழும் குடிகாரச் சின்னராசாவின் கொடுமையால் மனைவி தவமணியும் பிள்ளைகளும் வாடுவதைக் கதை விபரிக்கிறது. நிலைமையைப் பொறுக்காத தவமணி இத்தாலியனின் சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பெற்று நாடு திரும்பவும் ஏற்பாடுகள் செய்கிறாள். இறுதியில் 'குடிகாரன் எண்டாலும் புருஷன்..புருஷன்..' என்று தனது முடிவை மாற்றிக் கொள்கிறாள். இவர்களும் இலங்கையில் கலவரத்திற்கு முன்னர் நன்கு வாழ்ந்த குடும்பம் தான். புதிய சூழலின் விளைவாக குடும்ப உறவுகள் சிதைந்து விடுகின்றன. இளைய மகனே கத்தியைத் தூக்குமளவிற்குக் குடிகாரத் தந்தையின் கொடுமை. ஆனால் ஜேர்மனியக் குடுமபமோ நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறது. இலங்கைக் குடும்பமோ பிரச்சினைகளிற்குப் பின்னரும் சேர்ந்திருக்கிறது.இரண்டு விதமான கலாச்சாரங்கள் எவ்விதம் புதிய சூழலைத் தத்தமது பாணியில் எதிர்கொள்கின்றனவென்பதை அடிவானம் விபரிக்கிறது.

தொகுதியின் மற்றுமொரு நீண்ட கதையான 'பாவனை பேசலின்றி..' ஆஸ்திரேலியாவில் மரணித்த சின்னத்துரை வாத்தியாரின் இறுதிக் கிரியைகளின் பின்னணியில் அவர் அங்கு இருந்தவரை பட்ட துன்பங்களை எடுத்துரைக்கும். ஆஸ்திரேலிய மேற்குடி வாழ்க்கை வாழும் அவரது மகனும் மருமகளும் அவர் இருந்தபோதோ வயோதிபர் விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றார்கள். அவரால் ஒழுங்காகச் சுவையாகச் சாப்பிட முடியவில்லை. நண்பர்களுடன் இயல்பாக பழக முடியவில்லை. மகனதும் மருமகளினதும் மேற்குடி வாழ்க்கை முறை அவரைப் போட்டு அலைகழிக்கிறது. இறுதியில் சமூக உதவிப் பணமெடுத்தாவது தன்மானத்துடன் வாழ்வதற்காக அவரது உள்ளம் ஏங்குகிறது. பாவம் . அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை. அதே சமயம் இன்னுமொரு முதியவரான சம்பந்தியம்மா அடிக்கும் கூத்தும் விபரிக்கப் படுகிறது. முதியவர்களிலும் பலவிதம். பலவிதமான பிரச்சினைகள். இருக்கும் வரை அவரை இயல்பாக வாழ விடாதவர்கள் தமது கெளரவத்திற்காகத் தம்பட்டத்திற்காக, அவர் இறந்த பிறகு அவரது உடலிற்கு செய்யும் அலங்காரங்களென்ன? விடும் கண்ணீரென்ன? புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்கள் நிலையினையிட்டுக் குரலெலுப்பும் காலத்தின் கட்டாய பணிகளிலொன்றினை இக்கதை செய்கின்றது. அதே சமயம் கனடா போன்ற நாடுகளில் தற்கொலை செய்து கொண்ட முதியவர்கள் சிலரின் ஞாபகத்தினையும் இக்கதை தோற்றுவிக்கின்றது.

தொகுதியின் பெரும்பாலான கதைகள் மூன்றாம் மனிதரின் பார்வையில் கூறப்படுகின்றன. அந்த மூன்றாம் மனிதர் ஆசிரியரையே ஞாபகத்தில் கொண்டு வந்து விடுகிறது. பாத்திரங்கள் வாயிலாகவே கதைகளை நகர்த்தியிருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினைத் தந்ததற்காக ஆசிரியரையும், வெளியிட்டதற்காக 'மித்ர' பதிப்பகத்தினரையும் பாராட்டலாம்.

- திருமூலர்-

நன்றி:பதிவுகள்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, March 01, 2005

அரங்கியல்

.
ஆசிரியர்:பேராசிரியர் சி.மௌனகுரு
வகை:கட்டுரைத் தொகுப்பு
பக்கம்:xx + 217
விலை: 250.00 இலங்கை.ரூ
வெளியீடு:பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஆசிரியர் எழுதிய பதின்மூன்று கட்டுரைகளைக்கொண்ட நூல். "மௌனகுருவின் இந்த 'அரங்கியல்' அனைத்து அரங்கப் பரப்புக்களையும் பார்வைகளையும் உள்ளடக்கமுயன்று நிற்கிறது" என்கிறார், குழந்தை ம.சண்முகலிங்கம்.

நன்றி:தெரிதல்,அப்பால் தமிழ்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்